25/Sep/2020 08:40:06
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளைநிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகும். முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. அதைப்போன்று கோயம்புத்தூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது இதனால் பில்லூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 101 அடியை நெருங்கியது. 102 அடி வந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம்.அதன்படி வெள்ள அபாய எச்சரிக்கையும் கரையோர பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று வெகுவாக குறைந்தது. இந்த காலை 12 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.87 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 878 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது