03/Feb/2021 09:47:23
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டையில் நடைபெற்ற 28-ஆவது தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய 28-ஆவது தேசிய அறிவியல் மாநாட்டில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 11 பேர் கலந்துகொண்டு நிலைபுரு வாழ்விற்கான அறிவியல் -எனும் தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்வில் பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் வெ. சங்கரநாராயணன் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் நடைபெறவுள்ள அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்றார்.
மேலும், பள்ளியின் சார்பாக கலந்துகொண்ட இளம் விஞ்ஞானிகள், வழிகாட்டு ஆசிரியர்கள் துர்க்காதேவி, செந்தமிழ்ச்செல்வி, பிரியங்கா ஆசிரியர் சிவகுமார் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தேசிய அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானிகளாக கலந்து கொண்டு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியர்களையும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பாராட்டி வாழ்த்தினார்.