12/Jan/2021 08:35:19
ஈரோடு மாவட்டம், பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பட்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் ரூ.2 கோடி மதிப்பிலான அடிப்படை வசதிகளுக்கான திட்ட பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 100% பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதால் மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட உள்ளனர். போகிப் பண்டிகையை மாசு இல்லாத வகையில் தமிழக மக்கள் கொண்டாட சுற்றுச்சூழல் துறை சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் துறை சார்பில் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பவானி ஆறு மாசடைந்து இருப்பதை கமலஹாசன் சுத்தம் செய்வதாக கூறியிருப்பதை வரவேற்கிறேன். தமிழகம் முழுவதும் பல்வேறு வகைகளில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் உள்பட அக்கட்சியினர் ஒருவர் கூட வெற்றி பெறப் போவதில்லை.வீடு வீடாக ரேஷன் பொருள் கொடுக்கப்படும் என்று சொன்னவர்கள் நிலைமைதான் நடிகர் கமல்ஹாசனுக்கும் ஏற்படும் என்றார் கருப்பணன் தெரிவித்தார்.