logo
பொங்கல் வரை மழை  நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

பொங்கல் வரை மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

12/Jan/2021 06:37:49

சென்னை : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.அடுத்த சில மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்யும்.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தில் ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் பரவலாக மழை நீடிக்கும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது, சென்னை புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றார்.

இதனிடையே தற்போது கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யம் 18 செமீ, பேராவூரணி 15 செமீ, தலைஞாயிறு, அரபட்சணம் தலா 14 செமீ,திருப்பூண்டி 12 செமீ மழை பதிவாகியுள்ளது. குடவாசல், முத்துப்பேட்டை தலா 11 செ.மீ., பட்டுக்கோட்டை 10 செ.மீ, மதுக்கூர், மன்னார்குடி, மணமேல்குடி, திருவாரூர் தலா 9 செ.மீ,நாகை, கும்பகோணம், நன்னிலம், மஞ்சளாறு தலா 8 செமீ, மயிலாடுதுறை, காரைக்கால் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


Top