logo
வீடு மனை பட்டாக் கோரி ரேஷன் அட்டையை திரும்ப ஒப்படைக்க ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள்

வீடு மனை பட்டாக் கோரி ரேஷன் அட்டையை திரும்ப ஒப்படைக்க ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள்

21/Dec/2020 04:47:30

ஈரோடு, டிச:ஈரோடு  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு இன்று அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர். வடிவேலு தலைமையில் அரச்சலூர் அடுத்த குள்ளரங்கம் பாளையத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க வந்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியரின்  நேர்முக உதவியாளரிடம் அவர்கள் அளித்த கோரிக்கை  மனு விவரம்: நாங்கள் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த குள்ளரங்கம் பாளையத்தில் கடந்த 20  வருடங்களுக்கும் மேலாக 60  குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். அனைவரும் தினக் கூலி வேலை செய்து வருகிறோம். 40 குடும்பங்களுக்கு ஏற்கனவே வீடுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு வீடு மனை பட்டா வழங்க வில்லை.

இட நெருக்கடி காரணமாக காலியாக உள்ள இடத்தில் ஓட்டு வீடு மற்றும் ஓலைக்குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம். நாங்கள் பலமுறை வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  விரைவாக வீடுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள்  தங்களது ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப எடுத்துச் சென்றனர். 


Top