logo
நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

10/Jan/2021 07:07:11

ஈரோடு, ஜன: ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.  105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

 மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதனால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3925 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 500 கன அடியும் என மொத்தம் 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணை 36.60 அடியாகவும், பெரும்பள்ளம் அணை 12.64 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை 30.28 அடியாகவும் உள்ளது.இதில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து சனிக்கிழமை முதல் பாசனத்திற்காக  26 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கெட்டிசமுத்திரம் ஏரி, நம்பியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு 19-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 1039 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக பெரும்பள்ளம், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பவானிசாகர், பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரும்பள்ளம்  60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குண்டேரிபள்ளம் - 30, வரட்டுப்பள்ளம் - 20.4, பவானிசாகர் - 8, நம்பியூர் - 6, கொடிவேரி - 3, சத்தியமங்கலம் - 2.

Top