logo
ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்ட மண் பெருந்துறை: முதல்வர் பெருமிதம்

ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்ட மண் பெருந்துறை: முதல்வர் பெருமிதம்

08/Jan/2021 10:32:42

ஈரோடு, ஜன: கடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா பெருந்துறை மண்ணில் தான் வெளியிட்டார். இந்த மண் ராசியான மண். சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 ஈரோடு மாவட்டத்தில் 2 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி, பெருந்துறையில் வியாழக்கிழமை இரவு பிரசாரத்தை முடித்தார். முன்னதாக பெருந்துறை பேருந்து நிலையம் அருகே நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில்  அவர் மேலும் பேசியதாவது: அத்திக்கடவு-அவினாசி திட்டம் இந்த பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு திட்டமாக இருந்தது. அந்த திட்டத்தை முழுவதும் மாநில அரசின் விதியுடன் சுமார் ரூ.1,650 கோடியில் எனது அரசு நிறைவேற்றியது.

 இன்னும் ஒரு ஆண்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். குளம், குட்டைகளில் நீர் நிரம்பி நிலத்தடி நீர் பெருகி, விவசாயத்துக்கும், குடிப்பதற்கும் தேவையான நீர் கிடைக்கும். இன்னும் 2 ஆண்டுகள் கழித்து பெருந்துறை தொகுதியில் இருந்து வெளியூர் சென்று திரும்பியவர்கள் வந்தால், நாம் பெருந்துறை தொகுதியில் இருக்கிறோமா? இல்லை ஏதேனும் டெல்டா மாவட்டத்துக்குள் வந்து விட்டோமா? என்று ஆச்சரியப்படும் வகையில் மாற்றம் இருக்கும்.

 எந்த வாக்கு கொடுத்தாலும் அதை நிறைவேற்றுகிற அரசாக அதிமுக அரசு இருக்கும். பெருந்துறை தொகுதியில் 800 அடி ஆழத்தில் ஆழ்துளை போட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் நல்ல தண்ணீராக இருக்காது. இங்கே நல்ல நிலையான தண்ணீர் வேண்டும் என்று உங்கள் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ரூ.227 கோடியில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி உள்ளேன்.

 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு பெருந்துறையில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. சுற்றியுள்ள சாலைகள் 4 வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளன. அம்மாவின் அரசு மக்களுக்காக அனைத்தையும் செய்கிறது. இது கிராமங்கள் நிறைந்த பகுதி. ஏழை, எளிய மக்கள் அதிகமாக உள்ளனர்.

 மாணவ, மாணவிகள் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கின்றனர். இவர்களுக்காகதான் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆதித்திராவிட மாணவ-மாணவிகள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு வீடுகள் கட்டி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பசுமை வீடுகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகியன உள்ளன. பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு கூடுதல் ரூ.70 ஆயிரம் வழங்கும் வகையில் ரூ.1,805 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எம்.ஜி.ஆர். காலத்தில் வீடுகள்  கட்டி கொடுக்கப்பட்டன. அந்த வீடுகளில் கூரைகள் சேதமடைந்ததாக தகவல் கிடைத்தது. இந்த கூரைகளை சரிசெய்ய ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் கூரைகளை செப்பனிட நிதி கிடைக்காதவர்கள் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் வழங்கப்படும்.நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறந்த ஒரே அரசு எனது அரசு.இப்படி எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும், திட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் எதிர்க்கிறார். 


கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதில் இருந்து 8 மாதங்கள் கடுமையான காலக்கட்டத்தில் தொழிலாளர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். அப்போது ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 8 மாதங்கள் இலவச பொருட்களை வழங்கி ஏழை மக்களை காப்பாற்றினோம்.

காய்ச்சல் முகாம்கள் நடத்தி பல லட்சம் பேரை பரிசோதனை செய்து நோய் தொற்று கண்டறியப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் மருத்துவ பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பரிசோதனைகள் செய்து அதன்மூலம் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ முறை வசதிகளும் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

அரசின் எல்லா திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஜெயலலிதா 3 லட்சம் உழைக்கும் மகளிருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்தார். அம்மா மறைந்தாலும் அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 16 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

திருமண உதவித்தொகையாக தலா ஒரு பவுன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. 16 பொருட்கள் அடங்கிய குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. இதை நாங்கள்தான் வழங்குகிறோம். தி.மு.க. வழங்கவில்லை. கொரோனா காலத்தில் ரூ.1,000 வழங்கியதை தொடர்ந்து பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு ரூ.2,500 வழங்கி வருகிறோம். இதனையும் தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை முறியடுத்து ஏழை மக்களுக்கு இந்த தொகையை கொடுத்து வருகிறோம். மக்களுக்கு உதவித்தொகை கொடுப்பதை தடுக்கும் தலைவராக உள்ளார்.

அவர் பொய் அறிக்கைகள் வெளியிட்டு உள்ளார். இப்போது ஒரு சவால் விட்டு இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யார் தயவில் ஆட்சிக்கு வந்தார் என்று கேட்டுள்ளார். உங்கள் அப்பா யார் தயவில் ஆட்சிக்கு வந்தார். மக்கள் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் வாக்களித்தனர். ஆட்சியில் இருந்தபோதே அவர் இறந்தார். அவரது இறப்புக்கு காரணம் யார்? அவரது இறப்புக்கு பின்னர் நாவலர்தான் முதல்அமைச்சராக வரவேண்டும். ஆனால் கருணாநிதி தில்லு முள்ளு செய்து, சதித் திட்டம் தீட்டி ஆட்சிக்கு வந்தார். எனவே என்னை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது.


என் மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். உண்மையிலேயே  முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதை மறைக்கும் வகையில் அமைச்சர்கள் மீதும், என் மீதும் பொய்யான புகார்களை தெரிவிக்கிறார்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டால், அவர்கள் எங்கே செல்வார்கள் என்பது தெரியும்.

எங்கள் அமைச்சர்கள் களி சாப்பிடுவார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அவருடைய அமைச்சர்கள் தான் களி சாப்பிடுவார்கள். அவருடைய மகன் உதயநிதி பதவிக்கு வர மூத்த அமைச்சர்கள் இடையூறாக இருப்பார்களோ என்று ஸ்டாலினே வழக்கை விரைந்து முடிக்கும் வகையிலும், அப்புறப்படுத்தும் வகையிலும் ஊழல் பேச்சை தற்போது கையில் எடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஊழல் பிரச்சினை தொடர்பாக விவாதம் செய்யலாம் என்று நான் அழைத்தேன். அதற்கு அவர் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை முடித்துவிட்டு வாருங்கள் பேசலாம்  என்கிறார். அந்த வழக்குகளை போட்டதே தி.மு.க. தான். ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து அறிக்கையை மூடி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது. அதன்படி ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை கொடுத்த உரையை பிரிக்காமலேயே சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தோம்.

அதை 3 நீதிபதிகள் விசாரித்து எங்கள் மீதான வழக்கை விசாரிக்க அது உகந்ததல்ல என்று தடை விதித்தனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை விட மு.க.ஸ்டாலின்  அறிவாளியா? நீதிபதியே உகந்ததல்ல என்று சொன்ன வழக்கு தொடர்பாக பேசுவதாக இருந்தால் நீ வா... பேசு. எந்த துறை குறித்தும் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நாங்கள் பதில் தருகிறோம்.

என் மீது டெண்டரில் ஊழல் என்று கவர்னரிடம் புகார் அளித்து உள்ளார். டெண்டரே போடாமல், பணமே ஒதுக்காமல் எப்படி ஊழல் செய்ய முடியும். எதுவும் படிக்காமல், யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே  கொண்டு கவர்னிடம் கொடுத்து நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். அ.தி.மு.க. கட்சிக்கும், அரசுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருவதால் இவ்வாறு குற்றம் சாட்டி வருகிறார். எப்படியாவது ஆட்சிக்கு வர துடிக்கிறார். மக்கள் அனைவரும் தெளிவாக உள்ளனர். உங்கள் பருப்பு வேகாது. நாடகம் எடுபடாது. நான் உறவினருக்கு டெண்டர்கள் கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறார்.

நான் நடத்திய எந்த டெண்டராக இருந்தாலும், ஒளிவு மறைவின்றி இ-டெண்டர் முறையில் நடக்கிறது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் படிவம் வழங்கப்பட்டு, அதை பெட்டியில் போட்டு ஒப்பந்தம் முடிவு செய்யும் வழக்கம் இருந்தது. எனவே பழைய முறையில்தான் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி நான் டெண்டர் கொடுத்ததாக கூறப்படும் உறவினருக்கு தி.மு.க. ஆட்சியிலேயே 8 டெண்டர்கள் கொடுத்து இருக்கிறார்கள். 

அதுமட்டுமின்றி 1968 -ஆம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி எந்தந்த  உறவு முறையினருக்கு டெண்டர் வழங்க கூடாது என்று கேட்டிருந்தார். அதன்படி கிடைத்த பதிலில் உள்ள எந்த உறவு முறையிலும், நான் டெண்டர் கொடுத்தவர் இல்லை என்பதை மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே மக்கள் உங்களை புறக்கணித்து விட்டார்கள். ஒரு கட்சி தலைவராக இருக்கும் நீங்கள், இவ்வாறு பேசலாமா? எனவே உறவினருக்கு டெண்டர் வழங்கினேன் என்பது திட்டமிட்டு பழிக்கூறி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்களின் பட்டியல் வெளிவருகிறது. புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு ரூ.200 கோடி டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.430 கோடி கொடுத்து இருக்கின்றனர். இந்த ஊழல் தொடர்பான வழக்குக்கு தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை நீக்கிவிட்டு வந்தால், அதை பற்றியும் விசாரிப்போம். தி.மு.க. ஆட்சியில் சாலை பணியாளர் நிதி ஒதுக்கியதில் 72 சதவீதம் கூடுதல் நிதியும், மற்றொரு வழக்கில் 68 சதவீதம் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டு உள்ளது. எனவே ஊழல் செய்பவர்கள் தி.மு.க.வினர்தான்.

நான் நேர்மையான வழியில் ஆட்சி செய்து வருகிறோம். கிராமத்து எடப்பாடி பழனிசாமி தானே என்று நினைத்து நான் பதவி ஏற்றதும், ஆட்சி ஒரு மாதத்தில் கலைந்துவிடும், 6 மாதத்தில் கலைந்துவிடும், 1 ஆண்டில் முடிந்துவிடும் என்றெல்லாம் கூறினார். 4-ஆவது ஆண்டில்  அடியெடுத்து வைத்து இருக்கிறேன்.

அடுத்த ஆட்சியும் அம்மாவின் ஆட்சி தான். தெய்வத்தாய் அம்மா ஜெயலலிதா எனக்கு பிறகும், அ.தி.மு.க. நூறாண்டு காலம் ஆட்சியில் நீடிக்கும் என்று கூறினார். அதேபோல் இந்த ஆட்சி நீடிக்கும். அ.தி.மு.க. அம்மாவின் ஆசியுடன் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். உண்மை, தர்மம், நீதி வெற்றி பெறும். பொய் வெற்றி பெறாது. பொய் பொய்தான். அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும்.

 மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பெட்சீட் விரிந்து உட்கார ஊர்ஊராக சென்றார். வடிவேல் பாணியில் மீண்டும் புறப்பட்டு விட்டார். நாடாளுமன்ற தேர்தலில் ஏமாற்றம் அடைந்தது போல் மக்கள் சட்டமன்ற தேர்தலில் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. நாங்கள் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். சிறந்த திட்டங்களை கொடுப்போம். எம்.ஜி.ஆர்., அம்மா ஆட்சியை தருவோம். கடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையை அம்மா இந்த பெருந்துறை மண்ணில் தான் வெளியிட்டார். இந்த மண் ராசியான மண். சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் ஆட்சி தொடர அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள். பொங்கல் வாழ்த்துகள்.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வரவேற்றார். இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, எஸ்.ஈஸ்வரன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.பழனிசாமி, பொன்னுசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், அவைத்தலைவர் சந்திரசேகர், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பாலகிருஷ்ணன், அருள்ஜோதி.

பெருந்துறை ஒன்றியக்குழு தலைவர்  சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமாமகேஸ்வரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் மணிமேகலை, அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிசாமி, பெரியசாமி, துரைசாமி, கையிலங்கிரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல்-அமைச்சரின் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பெருந்துறை நகர் முழுவதும் அ.தி.மு.க.. கொடி தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மிக பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக இது அமைந்தது. பஸ் நிலையம் முதல் மார்க்கெட் வரை பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்து இருந்தனர். அனைவரும் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதல்வர் மேடைக்கு வந்ததும் வெற்றி நடை போடும் தமிழகமே... பாடல் ஒலிக்க வைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.   


Top