08/Jan/2021 06:58:00
புதுக்கோட்டை, ஜன: தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் பணிகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் தமிழக சுகாதாரத்துறை டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் கூறியது:இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை(ஜன.8) காலை 9 மணி முதல் 1 மணி வரை கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் ஒத்திகை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த வகையில் இது தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பூர்வாங்க நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தடுப்பூசியை கையாலுதல், தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய நபர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
திரையரங்கில் 100 சதவீத இருக்கைகள் அனுமதி தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் சுகாதாரத்துறை எந்த விதமான சமரசமு் செய்து கொள்ளாது. தமிழகத்தை பொருத்தவரை அரசின் உத்தரவின் படி ஏற்கெனவே அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகள், வழிகாட்டு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் காலை 9 மணி முதல் 1 மணி வரை ஆரம்ப சுகாதாரநிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.
மேலும், இன்று தமிழகம் வருகைதரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தமிழக முதல்வரை சந்தித்த பின் காலை 9 மணிக்கு சென்னையில் தடுப்பூசி மருந்து ஒத்திகை குறித்த பணிகளையும், சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிடுகிறார்.
தமிழகத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் படியே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார்.
சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வெற்றி பெற்றுள்ளதுடன், தமிழகத்தின் நடவடிக்கையை உலக நாடுகள் பாராட்டுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை விதிகளில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றார் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.