logo
திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே சமைத்து அசைவ உணவு விருந்து பரிமாறும் திருவிழா: குழந்தைகள், பெண்களுக்கு தடை

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே சமைத்து அசைவ உணவு விருந்து பரிமாறும் திருவிழா: குழந்தைகள், பெண்களுக்கு தடை

05/Jan/2021 08:34:13

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மட்டுமே ஒன்று கூடி அசைவ உணவு சமைத்து சாப்பிடும் திருவிழா நடைபெற்றது.

திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு கரும்பாறை முத்தையா சுவாமி கோயிலில் விவசாயம் செழிக்கவும் மழை பொழிந்து கிராம மக்கள் நோய் நொடியின்றி இருப்பதற்காகவும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் சுவாமிக்கு நேர்த்திக் கடனாக செலுத்திய ஆடுகளை வைத்து ஆண்களே சமைத்து ஆண்களுக்கு மட்டுமே அசைவ உணவு விருந்து அளித்து கிராமத்தினர் மகிழ்வது வழக்கம்.

அதே போல, இந்த ஆண்டும் 2000 கிலோ அரிசி, 55 கறுப்பு நிறஆடுகளை வெட்டி வருவல், குழம்பு மற்றும் மலைபோல் சமைத்த அரிசி சாதத்தை ஆண்களே சமைத்த பின்பு அவற்றை சுவாமிக்கு படைத்து பூஜித்த பின்பு அங்கு கூடி வரும் 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு ஒரே இடத்தில் மண் தரையில் அமர வைத்து இலை போட்டு அசைவ உணவினை பரிமாறி சொரிக்கான்பட்டி கிராமத்தினர் மகிழ்ந்தனர்.

மதுரை, திருமங்கலம், செக்கானூரணி, உசிலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து 10,000 -க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனத்துடன் அசைவ உணவினையும் உண்டு மகிழ்ந்தனர்.இதில் சிறு குழந்தைகள், பெண்கள் கலந்து கொள்ள முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சமைத்த உணவு மற்றும் கறி எஞ்சினால் மண் தரையை தோண்டி குழியில் கொட்டி புதைத்து விடுவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.


Top