14/Jun/2021 01:04:22
புதுக்கோட்டை, ஜூன்: கொரோனா தொற்றிலிருந்து மீண்ட இளைஞரின் உபயோகத்துக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பில் வாடகை இல்லாமல் ஆக்சிஸன் செறிவூட்டி கருவி வழங்கும் நிகழ்ச்சி புதுகை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கொரானோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட
புதுக்கோட்டை தொண்டைமான் நகரைச் சேர்ந்த பிரபாகரன்(29) என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது அவருக்கு நோய்தொற்று நீங்கி
விட்டது.
எனினும், நுரையீரல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டுக்கு சென்ற பின்னும் ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது என்ற நிலை குறித்து அவரது பெற்றோர்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜாவிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து , ரோட்டரி அமைப்புகளை சட்ட மன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டு பேசினார். இதன்படி, புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கத்தினர் பிரபாகரனுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படும் காலம் வரை வாடகையில்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 5 LPM திறன் கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டியை ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் பிரபாகரனின் பெற்றோர்களிடம் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை கிங்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கைலாசம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட செயலாளர் கான்அப்துல் கபார்கான், நகர திமுக செயலாளர் க.நைனாமுகமது, ரோட்டரி நிர்வாகி மாருதி கண.மோகன்ராஜா மற்றும் சங்க உறுப்பினர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.