29/Dec/2020 10:46:37
புதுக்கோட்டை, டிச: புதுக்கோட்டையில் புத்தாஸ் வீர கலைகள் கழக பெற்றோர் பயிற்சியாளர் கலந்தாய்வு கூட்டத்தில் விருதுகள் பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் , புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார் .நேரு யுவ கேந்திரா வின் ஏபிஏ நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் தேவதைகளால் தேடப்படுபவன் என்ற நூலினை படைத்தமைக்காக தமிழக அரசின் விருது பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்தி , இந்திய மருத்துவ சங்கத் தலைவரிடம் சிறந்த மருத்துவ சேவைக்கான விருது பெற்ற , மருத்துவர் சலீம், சமூக சேவையில் சாதனை படைத்து தாயுள்ளம், புக் ஆப் ரெக்காட்ஸ் ஆகிய நிறுவனங்களில் விருது பெற்ற மருத்துவர் முத்துராஜா ஆகியோருக்கு தொழிலதிபர் எஸ்.வி எஸ் ஜெயக்குமார் பாராட்டி கெளரவித்தார்.
இதில், வழக்குரைஞர் செந்தில் குமார், அறிவியல் இயக்க நிர்வாகி வீரமுத்து, பேராசிரியர் அய்யாவு, கல்வியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டி பேசினர். விழாவின், கலந்துகொண்ட பெற்றோர்களிடம் ஜனவரியில் மாணவர்களுக்கு தற்காப்பு கலை வகுப்புகள் தொடங்குவது தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டது. முன்னதாக புத்தாஸ் வீர கலைகள் கழக நிறுவனர் சேது கார்த்திகேயன் வரவேற்றார். நிறைவாக பெற்றோர் பயிற்சியாளர் கழக தலைவர் அஸ்வின் குமார் நன்றி கூறினார்