logo
இன்று ஒரு  தகவல்- ஆரோக்கியமாய் வாழ அவரைக்காய் சாப்பிடுங்கள்

இன்று ஒரு தகவல்- ஆரோக்கியமாய் வாழ அவரைக்காய் சாப்பிடுங்கள்

26/Dec/2020 10:45:42

நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும், அது உண்மையிலேயே ஒரு பீன்ஸ் / பட்டாணி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. கிரீஸ் மற்றும் ரோம் நகர மக்கள் அந்தக் காலத்திலேயே இதைத் தங்கள் உணவில் சேர்த்திருந்ததாகவும் தெரிகிறது.

கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். ஒரு அவரைக்காயில் 25 முதல் 50 விதைகள் வரை இருக்கும். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும்.

அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவரையில் உள்ளன. இப்போது உடல் ஆரோக்கியத்திற்கு அவரைக்காய் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

இதயத்திற்கு: கால் கப் அவரையில் 9 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் நம் இதயத்திற்கும் மிகவும் நல்லது.

எடை குறைய:கால் கப் அவரைக்காயில் 10 கிராம் புரதச்சத்து உள்ளது. இதனால், அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்து, உடல் எடையும் சரசரவென்று குறைந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அதிக ஊட்டச்சத்து: அவரைக்காயில் வைட்டமின் , இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

மன அழுத்தம் போக்க: அவரைக்காயின் சுவையே தனி. அதில் அதிகமாக உள்ள எல்-டோப்பா என்ற அமினோ அமிலம்தான் அந்தத் தனிச் சுவையைக் கொடுக்கிறது. அந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து, மன அழுத்தங்களைப் போக்குகிறது.

பசியைப் போக்கும்: அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால், இந்த உணவைச் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்குக் கிடைக்கும்.

இரத்த அணுக்களுக்கு:அவரைக்காயில் உள்ள இரும்புச் சத்து, நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அவரைக்காயை மெயின் டிஷ்ஷாகவும், சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகளுடன் ஸைட் டிஷ்ஷாகவும் உண்பது மிகவும் நல்லது.

எலும்பு வளர்ச்சிக்கு: நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியச் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது.

 மலச்சிக்கலுக்கு: வரைக்காயில் உள்ள நார்ச்சத்து, நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி பெருக:அவரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டாது. வேறு சில நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக்க:அவரைக்காயில் உள்ள பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ள நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.

நுரையீரலுக்கு: நம் உடலில் உள்ள நுரையீரலிலிருந்து மற்ற செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு இரும்புச் சத்து மிகுந்த ஹீமோகுளோபின் உதவுகிறது. அவரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Top