logo
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

24/Dec/2020 07:49:00

ஈரோடு, டிச: ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமைதோறும் மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. 

இந்த சந்தைக்கு வரத்தாகும் மாடுகளை ஈரோடு மட்டும் அல்லாது தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்து வாங்கி செல்வார்கள்.  இந்நிலையில், வியாழக்கிழமை கூடிய  மாட்டுச் சந்தையில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து 800  மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

 இதில், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கால்நடை பாரமரிப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில் கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: இந்த வாரம் கூடிய சந்தையில் பசு-450, எருமை-250, கன்று-100 என 800 மாடுகள் வரத்தானது. இதில், பசு மாடு ரூ.30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45ஆயிரம் வரையும், கன்று ரூ.10ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன.

 தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், அருப்புக் கோட்டை , விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மாடுகளை வாங்கி கொடுத்தனா். இதன்காரணமாக இந்த வாரம் சந்தைக்கு வரத்தான மாடுகள் 90சதவீதம் விற்பனையானதாக   கூறினார்.

Top