24/Dec/2020 06:28:36
ஈரோடு, டிச: ஈரோட்டில் நடந்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் கூறியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தயாராக உள்ளது. தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை இளைஞர் அணி மூலம் நடத்த இருக்கிறோம். தூத்துக்குடியில் தொடங்கும் இந்த கூட்டம் மாநிலம் முழுவதும் ஜனவரி மாதம் வரை நடத்தப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற அளவில் இளைஞர் அணியினர் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடனான ஆலோசனையில் பூத் குழுக்கள் அமைத்து தேர்தல் பணியை தொடங்குவது குறித்து அறிவுரைகள் வழங்கப்படும்.
ஜனவரி மாதத்தில் ஈரோடு மற்றும் சென்னையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாநில இளைஞர் அணி கூட்டங்கள் நடத்தப்படும்.
தமாகா தலைவர் ஏற்கெனவே தெளிவாக குறிப்பிட்டு உள்ளபடி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமாகா உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி ஏற்பார். அ.தி.மு.க.வின் வெற்றிக்கு தமாகா தீவிரமாக களப் பணியாற்றும்.
திமுக. கடந்த 4 ஆண்டுகளாக ஆளும்
அ.தி.மு.க. மீது குற்றச்சாட்டுகள் வைத்து உள்ளது. பொய்யான பிரசாரங்களை
தொடர்ந்து வைத்து வருகிறத. நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, விவசாயிகள் பிரச்சினைகளில் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை
தி.மு.க. செய்கிறது. கொரானாவைப்பொறுத்தவரை
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்
அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்களை அ.தி.மு.க. அரசின் நடவடிக்கையால் உயிர் தப்பி உள்ளனர்.
திமுக வின் பொய் பிரசாரங்களை மக்கள் நம்பாததால், தற்போது அதிமுக மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. ஊழலின் ஊற்றுக்கண் என்றால் அது திமுகதான். ஊழல் குற்றச்சாட்டுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக. ஆட்சிதான்.
தமிழகத்தில் பொங்கல் பரிசான ரூ.2,500 வழங்குவதையும் ஊழல் என்றும், மினி கிளினிக் அமைப்பதை ஊழல் என்றும் திமுகவினர் தொடர்ந்து பேசி
வருகின்றனர். ஆனால் அவர்கள் மீண்டும் இந்த
தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள். திமுக.வின் 200 லட்சியம் என்பது
தோல்வியிலேயே முடியும். திமுக ஆட்சிக்கு வந்தால்
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார்கள்.
திமுக அல்ல எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. எனவேதான் தமிழக முதல்-அமைச்சர் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு
மூலம் ஏழை அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை நிறைவேற்றி உள்ளார்.
விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு பேசித்தீர்க்க வேண்டும் என்று ஏற்னவே தமாகா தலைவர் அறிவுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி 3 மாதங்கள் ஆகிறது. தமிழகத்தில் எந்த விவசாயியும், விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், பஞ்சாப் அரியானாவில் மண்டி அதிபர்களுக்கு பாதிப்பு என்பதால், அவர்கள் பணம் கொடுத்து விவசாயிகளின் பின்னணியில் இருந்து போராட்டத்தை நடத்துகிறார்கள்.
தமிழகத்தில் நல்ல மழை பெய்து மகசூல் நன்றாக இருக்கும் நிலையில் விவசாயிகளை குழப்பும்
நடவடிக்கைளில் எதிர்க்கட்சிகள்
செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சினையை திமுக
கூட்டணி அரசியல் ஆக்க வேண்டாம்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் திமுக.வுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். ஆனால், திமுகவினர் அதிமுகவுக்கு பாதிப்பு என்பதுபோல் பேசி வருகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்.
மத்திய அரசு வேலைவாய்ப்புக்காக ஒதுக்கி உள்ள ரூ.27 ஆயிரம் கோடியில் தமிழகத்துக்கு
அதிக நிதி ஒதுக்க வேண்டும். 80 வயதுக்கு
மேற்பட்டவர்கள் தபால்
ஒட்டு போடலாம் என்கிற தேர்தல் அணைத்தின்
முடிவை வரவேற்கிறோம்.
போக்குவரத்து துறை, ரெயில்வே துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகளை தனியார் மயம் ஆக்குவதை எதிர்க்கிறோம். மின்சாரத்துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.
கொரோனா பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு வரும் நிலையில் மின்சாரத்துறை தனியார் துறை ஆக்குவது நல்லது அல்ல. இதுபோல் மின்இணைப்புக்காக கூடுதல் வைப்புத்தொகை கேட்பதும் சரியல்ல. வருகிற 23--ஆம் தேதி ஜி.கே.வாசன் பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக கொண்டாடப்படும் என்றார் யுவராஜா.
பேட்டியின்போது இளைஞர் அணி மாவட்ட தலைவர் கே.ரமேஷ்(மத்திய), விஜய் (வடக்கு), வட்டார தலைவர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.