21/Dec/2020 06:43:39
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை (டிச.21) தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கத்தை வழங்கி, தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார்.மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.10 கோடி பேருக்கு பொங்கல் பரிசாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஏலக்காய், முந்திரி மற்றும் ஒரு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதுடன், ரூ.2,500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டு, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற் கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜனவரி 4-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்துள்ளார்.