18/Dec/2020 05:08:03
ஈரோடு, டிச: ஈரோடில் ஓடை ஆக்கிரமிப்பில் வீடு கட்டி வாடகைக்கு விட்ட நபர்களுக்கு குடிசை மாற்று குடியிருப்பு இடமில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஈரோடு மரப்பாலம் பகுதி பெரும்பள்ளம் ஓடைக்குள் ஆக்கிரமிப்பில் இருந்த குடியிருப்புகளில் யாரும் இல்லாமல் காலியாக இருந்த 8 வீடுகளை மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர் சண்முகவடிவு தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் கடந்த வாரம் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர். குடியிருந்து வரும் வீடுகளுக்கு கால அவகாசம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் மரப்பாலம் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள், மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவனை சந்தித்து, வீடுகள் இடிக்கப்பட்டதால் வீடில்லாமல் சாலையில் வசித்து வருகிறோம். தஎங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.
இதற்கு, 6 மாதங்களுக்கு முன்பே ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை இடிக்க போகிறோம் என்று மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதை நீங்கள் மதிக்கவில்லை. இப்போதும் காலியாக இருந்த வீடுகள் தான் இடிக்கப்பட்டது. அதனால் மாற்று இடம் தர முடியாது. அப்படி உண்மையாக வீடிழந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய வீடுகள் வீடு ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்.
பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையான ரூ.1 லட்சத்தை மாநகராட்சி செலுத்தும். சிலர் ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். அவர்களுக்கு பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என கூறிய ஆணையர் மா.இளங்கோவன் அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.