logo
இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு:ஈரோட்டில்  3 மையங்களில் நடந்தது

இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு:ஈரோட்டில் 3 மையங்களில் நடந்தது

13/Dec/2020 08:14:35

ஈரோடு- டிச: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு இன்று  திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா பொறியியல்  கல்லூரி மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி என மூன்று மையங்களில் அமைக்கப்பட்டிருந்தது.  இந்த தேர்வினை 1,338 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட மொத்தம் 8,895பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை  காலை 9 மணியில்  இருந்தே தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வரத் தொடங்கினர். கடும் சோதனைக்கு பிறகே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி நுழைவாயில் தேர்வர்கள் வந்தவுடன் அவர்கள் கையில் கிருமிநாசினி  தெளிக்கப்பட்டு கைகள் சுத்தப் படுத்தப் பட்டது. தேர்வர்கள் அனைவரும்  முக கவசம் அணிந்து வந்திருந்தனர். தேர்வர்கள் கொண்டுவந்த பொருட்கள் தனியாக வாங்கி வைக்கப்பட்டது. 

அவர்களின் உடல் வெப்பநிலையை  தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட அளவு விட வெப்பம் அதிகமாக உள்ளவர்கள் தனியாக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் அவர்களை பரிசோதித்து தேவையான சிகிச்சைகளை அளித்து அந்த தேர்வர்கள் மட்டும் தனி தேர்வறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 

தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 மணிக்கு  முடிந்தது. 80 நிமிடம் நடந்த தேர்வில் 80 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. தேர்வறையில் சமூக இடைவெளி கடைபிடித்து இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஈரோடு எஸ்.பி. தங்கதுரை தலைமையில் ஏ.டி.எஸ்.பி., 6 டி.எஸ்.பி.க்கள் என மொத்தம் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 


Top