logo
கொரோனாவால்  குடும்பத்தலைவரை இழந்த பிற்படுத்தப்பட்டோரின குடும்பத்துக்கு கடனுதவி: ஆட்சியர் கவிதாராமு தகவல்

கொரோனாவால் குடும்பத்தலைவரை இழந்த பிற்படுத்தப்பட்டோரின குடும்பத்துக்கு கடனுதவி: ஆட்சியர் கவிதாராமு தகவல்

24/Jun/2021 10:02:16

புதுக்கோட்டை, ஜுன்: கோவிட் தொற்றால் பிற்படுத்தப்பட்டோர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபர்  உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்திற்கு கடனுதவி வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் SMILE  என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்.  குடும்ப வருமானம் ஈட்டக் கூடிய நபரின் வயது 18 முதல் 60 -க்குள் இருக்க வேண்டும். 

இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ.5 இலட்சம் வரை இருக்கலாம்.  திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.4 இலட்சம் வரை கடன் வழங்கப்படும்.  மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.  ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பித்து பயனடையலாம்.

 

Top