logo
வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாய சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாய சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு

08/Dec/2020 12:04:39

சென்னை-டிச: விவசாயிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


3 வேளாண் சட்டங்களை கடும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் தில்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெறுகிறது.


விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.


வடமாநிலங்களில் விவசாயிகள் அறிவித்திருக்கும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் என்பதால் முழு அடைப்புக்கு ஆதரவளிக்க முடியவில்லை என கேரளா மாநிலத்தில் ஆளும் அரசாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்திருக்கிறது.


தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை வலுவாக நடத்திட திட்டமிட்டுள்ளன. அதேவேளை முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக அரசும் தீவிரமாக  இருக்கிறது. எந்த வகையிலும் முழு அடைப்பையொட்டி, பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதித்து விடக்கூடாது என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.


அதேவேளை முழு அடைப்பையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொ.மு.ச. உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்படுகின்றன என்றும், அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளனர்.தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி. உள்பட 16 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று பணிக்கு வரமாட்டார்கள். சூழ்நிலைக்கேற்ப இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபடுவார்கள் என  தொழில் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


அதேவேளை போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படகூடாது என்பதில் போக்குவரத்து கழகம் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22 ஆயிரம் மாநகர பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், நகர் பேருந்துகள் உள்பட  அனைத்து பேருந்துகளும்  இன்று வழக்கம்போலவே இயங்கும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


மேலும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும்  ஓட்டுநர்கள், நடத்துனர்கள்  பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் இருப்பவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப அந்தந்த கிளை மேலாளர்கள் சார்பில் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


அதேவேளை இன்று பகலில் ஆம்னி பேருந்து  சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், தற்போது பகலில் சொற்பமான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி இன்று பகலில் ஆம்னி பேருந்து  சேவை ரத்து செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு பிறகு தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் வழக்கமான பேருந்து  சேவை இருக்கும் என்றார்.


முழு அடைப்பு நடந்தாலும் ரயில் போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றே தெரிகிறது. வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் இன்று வழக்கம்போலவே இயக்கப்படும். முழு அடைப்பையொட்டி பயணிகள் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் ரயில் நிலைய நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில்கள் சேவையில் பெரிய பாதிப்பு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


நாடு முழுவதும் விவசாயிகள் இன்று அறிவித்திருக்கும் முழு அடைப்புக்கு எதிர்க்கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இன்று கடைகள் வழக்கம்போலவே திறக்கப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது.


முழு அடைப்புக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் இன்று பெருமளவில் ஆட்டோக்கள் இயங்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ஆட்டோ டிரைவர்களில் 80 சதவீதம் பேர் தொழிற்சங்கங்களில் இணைந்திருக்கிறார்கள்.

அந்தவகையில் இன்று ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடாது. இயக்கப்படும் சில ஆட்டோக்களும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு நிர்ப்பந்திக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றனர்.


தமிழகத்தில் முழு அடைப்பையொட்டி, பொதுமக்கள் நலனுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் போலீசார் உஷாராக இருக்கிறார்கள். ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.


முழு அடைப்பையொட்டி, பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும், எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் போலீசார் முழு அக்கறையுடன் இருக்கிறார்கள். முழு அடைப்பையொட்டி வன்முறை சம்பவங்களில் யாரும் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடாதபடி கவனமாக இருக்கவேண்டும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

புதுக்கோட்டையில் பராத் பந்தையொட்டி முழு அடைப்பு:

புதுக்கோட்டையில் பராத்பந்தையொட்டி பஸ்நிலையம் அருகிலுள்ளகடைகள்கீழராஜவீதி, கீழ 2, வடக்கு மற்றும்  மேலராஜ வீதி உள்ளிட்டவீதிகளிலுள்ள  வர்த்தக நிறுவனங்கள்  ஓட்டல்கள் அடைக்கப்பட்டுள்ளது. 

Top