logo
ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 3 -வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நீடிப்பு

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 3 -வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நீடிப்பு

17/Dec/2020 07:05:23

ஈரோடு- டிச: ஈரோடு காளைமாடு சிலை அருகே உள்ள தங்க பெருமாள் வீதியில் உள்ள ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற பிரபலமான கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஈரோடு மதுரை கோவை உள்பட மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த நிறுவனத்தினரால் பஸ் போக்குவரத்து, மசாலா பொருட்கள் உற்பத்தி நிறுவனம், கல்குவாரி, கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களும் நடத்தப்படுகின்றன. 

 ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியில் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு, முள்ளம்பரப்பு பகுதியில் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் உள்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 2-ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வந்தது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சோதனையின் போது அனைத்து கோப்புகளையும் அதிகாரிகள் சரிபார்த்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத  ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதைப் போன்று சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இரண்டாவது நாளாகவும் விடிய விடிய சோதனை நடந்தது.

 மூன்றாவது நாளாகவும் வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது. கட்டுமான நிறுவன உரிமையாளர் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Top