logo
இன்றைய சிந்தனை...கத்திரிக்கோல் வேண்டாமே...!

இன்றைய சிந்தனை...கத்திரிக்கோல் வேண்டாமே...!

06/Dec/2020 02:00:52

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம். கற்றிருந்தாலும் கைவிடப்பட வேண்டிய கலை ஒன்று இருக்கிறது தெரியும்..அதுதான் கத்தரிக்கோல் கலை.இயல்பாகவே சிலருக்கு இது கைவந்த கலையாக இருக்கும். இக்கலை வல்லுனர்களை எளிதில் இனம் காணலாம். 

அவர்கள் வேலை ஆகும்வரை வளைந்து நெளிந்து குழைந்து பேசுதல் அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்தல், நம்மைப் பாராட்டி நம்மிடமே அளப்பு அரிப்பார்கள், அவர்கள் வேலை முடிந்ததும் காணாமல் போய் விடுவார்கள். நாம் வலியப்போய் பேசினாலும், எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது, நாளைக்கு பேசலாமா.என்று நழுவி சென்று விடுவார்கள். இப்படிபட்ட கத்திரிக்கோல் கலைஞர்களை நாம்தான் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு உதவி செய்து விட்டார் என்று, திரும்பத் திரும்ப நாமே அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எப்படி இவர் எதிர்பார்க்கலாம். அதற்காக இப்போது என்னுடைய மரியாதைக்கு இவரிடம் இப்போது நான் தொடர்பு வைத்து கொள்ள முடியுமா.இப்படி எண்ணி எண்ணி அத்தகைய நட்பும், உறவும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்...

நீங்களும் இந்த வகை கலைஞரில் ஒருவரா, அப்படி என்றால் உங்களுக்கு சில வார்த்தைகள்:எவரையும் குறைத்து மதிப்பு இடாதீர்கள். இவரால் நமக்கு இனி ஆக வேண்டியது ஒன்றுமில்லை என யாரையும் எடை போட வேண்டாம். யார் உதவி, எப்போது தேவைப்படும் என்பது இப்போது தெரியாது.சிறு உதவி செய்ததற்கே நீங்கள் நன்றி உள்ளவராக இருக்கும்போது மேலும் பெரிய உதவிகளை அவராக முன்வந்து செய்யக்கூடும்தானே. அவருக்கு பெரிய மனம் இருந்ததால்தானே உங்கள் வேலையை வெற்றிகரமாக அவர் மூலம் சாதித்து இருக்கிறீர்கள்.

நீங்கள் கத்தரிக்க நினைப்பதை புரிந்து கொண்டால், அவர் முந்திக் கொள்வதுடன் நன்றி கெட்டவர் என்கிற பட்டத்தையும் உங்களுக்குத் தருவார். பிறகு, நீங்கள் வலியப் போனாலும் அவர் மனதில் நீங்கள் செல்லாக்காசு ஆகிவிடுவீர்கள்தானே.

சின்னஞ்சிறு உதவி செய்தவரைக்கூட மறக்காதீர்கள். எதையும் சிறிது என மதிப்பு இடாதீர்கள். சில  நேரங்களில் சின்னச் சின்ன உதவிகள்தான் நமக்கு தேவையாக இருக்கும்.பணக்காரர் இல்லையே என ஏளனமாக நினைக்க வேண்டாம். ஆபத்து காலத்தில் உதவி செய்யாத செல்வந்தர்களைக் காட்டிலும் கையில் இருந்ததை அப்படியே கொடுத்து உதவிய ஏழை நண்பனே மேல்.

ஆம் நண்பர்களே... கத்தரிக்கோல் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு அன்பான நண்பர்களோ, உறவினர்களோ, இருக்க மாட்டார்கள். இவரைத் தெரியாதா,  இவர் தன் வேலையாகும்வரை காலைச் சுத்தி வருவார். வேலை ஆனதும் காலை வாருவார் என்று நிச்சயம் உங்களைப் பற்றி அவர்கள் மத்தியில் ஒரு பேச்சிருக்கும்.

உங்களால் கத்தரிக்கப்பட்டவர்கள் உங்களைப் பற்றி அவதூறாக தமக்குள் மட்டுமல்ல, உறவினர், நண்பர்களிடமும் பரப்புரை செய்வார்கள். மொத்தத்தில் அதனால் உங்கள் குடும்பத்தினரும் மரியாதை இழக்க நேரிடும். எனவே, எரையும் எந்த காலத்திலும், எக்காரணம் கொண்டும் கத்தரித்து விடாதீர்கள்.

மன்னிக்க வேண்டியதை மன்னிப்போம்.நன்றி மறவா செயலில் ஈடுபடுவோம்..அதுவே மனிதத்தன்மை,அதுதான் உயர்ந்ததன்மை.இந்த நாள் இனிதாகட்டும்.

Top