logo
ஈரோடு அருகே திருமணம் முடித்து மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமணத்தம்பதிகள்..!

ஈரோடு அருகே திருமணம் முடித்து மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமணத்தம்பதிகள்..!

27/Nov/2020 04:44:23

ஈரோடு: ஈரோடு மாவட்ட, கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட  மணமக்கள் திருமண மண்டபத்திலிருந்து மணமகன் வீடுவரையிலும் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு  கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கும் வகையிலும் புகையில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருமணம் என்றாலே ஆடம்பரம் அலங்கார விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனம் பல வகை உணவு வகைகள் என பணத்தை தண்ணீராக செலவு செய்து திருமணங்களை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் கூட வீடுகளில் திருமணம் நடத்தி பல ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

 தற்போது கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்ககையாக திருமணங்கள் வீடுகளில் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் திருமணம் என்றால் ஆடம்பரம் என்ற மோகம்  மக்களிடம் மேலோங்கிய நிலையில், ஒரு சிலர் திருமணங்களை புதுமை முயற்சி என்ற போர்வையில்  கேலிக்கூத்தாகவும் நடத்தி வருகின்றனர். இதனால், புனிதமான திருமணம் நவநாகரீகச் சுழலுக்குள் சிக்கி  பாரம்பரிய  பழக்க வழக்கங்கள் அழிந்து அருகிவிட்டன.

 இச்சூழ்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற கௌதமன் - சௌந்தர்யா ஆகியோர் திருமணத்தில் பழமையை நினைவு கூறும் விதமாகவும் பாரம்பரித்தை மீட்டெக்கும் முயற்சியாகவும் மணமக்கள்  திருமண மண்டபத்திலிருந்து மணமகன் வீடு உள்ள வெள்ளாளபாளையம் கிராம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு  இரட்டை மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர். 

விவசாய குடும்பங்களிலிருந்து வரும் புதுமணத்தம்பதிகள் மாட்டு வண்டிப் பயணம் மேற்கொள்வது இயல்பு என்றாலும் இந்த மணமக்கள் இருவரும் முதுகலை பட்டயப்படிப்பு முடித்து நகர்பகுதியில் நாகரீகச்சூழலில்  வாழ்ந்துவருபவர்கள். இவர்களது பெற்றோர்கள் திருமணத்திலன் போது அவர்கள் மாட்டு வண்டியை மட்டுமே போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்ததை அறிந்து அவர்களது பிள்ளைகளாக மணமக்கள் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு பழைமையை நினைவூட்டினர்.

 மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை வழியில் உள்ள கிராம மக்களும் நகர் பகுதி மக்களும் வியப்புடன் பார்த்ததுடன் ஒரு சிலர் மணமக்கள் மாட்டுவண்டி உள்ள நிலையில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

 இந்த மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்ட தம்பதிகள் தெரிவிக்கையில்,  எங்களது இரு குடும்பங்களும் விவசாயம் சார்ந்த குடும்பங்கள் என்பதால் வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நினைவு கூறவேண்டும் என்ற  நோக்கிலும் புகையில்லா சுற்றுச்சூழலுக்கான  விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்டதாகவும், இப்பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றும் தெரிவித்தனர். 

மேலும் இத்திருணமத்தில் மணமகனுக்கு பெண் வீட்டு சீதனமாக புதிய சொகுசு கார் அளிந்திருந்த நிலையிலும் மணமகள் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்ளவே விரும்பம் தெரிவித்தது அனைவரையும்  வியப்பில்  ஆழ்த்தியது.


Top