25/Nov/2020 06:38:37
ஈரோடு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது பட்டேல் மறைவையொட்டி நாடு முழுவதும் அவரது உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பட்டறை உள்ள கட்சி அலுவலகத்தில் அகமது பட்டேல் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அகமது பட்டேல் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் பெரியசாமி, மாவட்ட மனித உரிமை துறை தலைவர் குமரேசன், மாவட்ட துணை தலைவர் கோதண்டபாணி, பொதுச் செயலாளர்கள் கனகராஜ், வின்சென்ட், முகமது அர்ஷத், சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கே.என். பாட்ஷா உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.