18/May/2020 08:30:34
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றால் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பல்வேறு பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில், மாவட்டத்தில், தெட்சிணாபுரம், வேங்கிடகுளம், மாங்கோட்டை, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், அணவயல், புள்ளான்விடுதி, வானக்கண்காடு, பெரியவாடி, மழையூர் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் வாழைகள் முழுவதும் உடைந்து சேதம் அடைந்தன. கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால்,உரிய விலை கிடைக்காமல் வாழை விவசாயிகள் பெரும் சிரமத்திற்காளாகி வந்தனர். இந்நிலையில்,பொது முடக்கத்தில் இருந்து சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சூறைக்காற்றால் வாழைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்ததுள்ளனர்.
சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.