logo
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்  தவசிக்கு  நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர்  நிதியுதவி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி

18/Nov/2020 11:37:34

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைர் சேர்ந்தவர்  திரைப்பட நடிகர் தவசி .( இவர், கிழங்கச் சீமையிலே படத்தில்  துணை நடிகராக அறிமுகமாகி தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வந்தார்.

ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவர், கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் முடிந்துள்ளது.

இவர், கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த போது தான் புற்று நோய் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கும் சிகிச்சைப் பெற்று வந்தார். இருப்பினும், போதிய பண வசதியின்றி சிகிச்சையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாள்களாக புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனிடையே தனக்கான மருத்துவச் சிகிச்சைக்கும், வறுமையில் வாடும் தனது குடும்பத்தினருக்கும் நிதியுதவி கோரியவிடியோ ஒன்று வலைதளங்களில் பாவியது.

இதையறிந்த, திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பா.சரவணன் தனது  மருத்துவமனையில் வைத்து நடிகர் தவசிக்கு இலவசமாக சிகிச்சையளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், மகன் பீட்டர்ராஜ். மகள் முத்தரசியும் உள்ளனர்.

புற்றுநோயால் மெலிந்த உடலுடன் கம்பீரமான மீசையும் இல்லாமல் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன தவசி:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் ரூ. 25,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத் தலைவர் மோகன், தவசியிடம் நிதியுதவியை நேரில் வழங்கினார். நடிகர் சூரி, தவசிக்கு முதற்கட்டமாக ரூ. 20,000 நிதியுதவியும் தவசி மற்றும் அவருடைய உதவியாளருக்கு மூன்று வேளை உணவும் வழங்க முன்வந்துள்ள தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து நடிகர் ரஜினி காந்த்  தவசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவிக்கரம் நீட்டுவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது

Top