logo
இன்றைய சிந்தனை(16.11.2020) இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே வாழுங்கள்..

இன்றைய சிந்தனை(16.11.2020) இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே வாழுங்கள்..

16/Nov/2020 02:03:55

எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான். எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.

எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம். வாழ்க்கையும் இதே மாதிரி தான்.நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.

அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.அவன் தான் இறைவன். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.

உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார்,இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார், இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார். ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.

நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும், மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.நீங்கள் உங்களது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்..நீங்கள் உங்களது தொழிலை நோக்கி செல்கின்றீர். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல்  அலைகின்றனர்.இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

 நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றீர்.எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்.இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றீர். எத்தனையோ மரித்த ஆன்மாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர்.இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

நீங்கள் நீங்களாக இருக்கின்றீர். எத்தனையோ பேர் அவர்கள் பிறரைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்.இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வியுங்கள்..இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருங்கள். பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை. தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  இருங்கள்  இறைவன் அருள் புரியட்டும். யார் யார் எந்தெந்த தெய்வங்களை வணங்குகிறீர்களோ அவரவர்கள் அந்தந்த தெய்வங்களிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள்.உங்கள் வாழ்க்கை வளமாகி விடும். சத்தியமான உண்மை.       


Top