logo
தீபாவளி பட்டாசுகளை கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை; ரூ.1000 அபராதம் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

தீபாவளி பட்டாசுகளை கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை; ரூ.1000 அபராதம் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

11/Nov/2020 09:23:45

சென்னை:கொரோனா தொற்று எதிரொலியால் நாடு முழுவதும் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டது. அந்தவகையில் பயணிகள் ரெயில் சேவையும் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. சரக்கு ரெயில்கள் மற்றும் பார்சல் ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பண்டிகை காலங்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க, சொந்த ஊர்களுக்கு செல்லும்போது மக்களுக்கு கூடுதலாக பண்டிகை கால சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது. இந்தநிலையில், ரெயில்களில் செல்லும் பயணிகள், பட்டாசுக்களை கொண்டு செல்லக்கூடாது என, எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், தீபாவளி என்றால் கொண்டாட்டம்; பட்டாசு எடுத்து சென்றால் திண்டாட்டம், போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கி, பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, பயணிகள் யாரும் ரெயிலில் பட்டாசு எடுத்து செல்ல செல்லாக்கூடாது என்றும், மீறி பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப் பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்’ என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர்.

தீபாவளி பண்டிகைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட ரெயில்வே பாதுகாப்படை மற்றும் ரெயில்வே போலீசார் சார்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெய வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் மோகன், பத்ம குமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரோஜ் குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Top