logo
நள்ளிரவில் ஆஸ்திரேலியாவில் தீப்பிடித்த வீடு: பேசும் கிளியால் உயிர் தப்பிய மனிதர்

நள்ளிரவில் ஆஸ்திரேலியாவில் தீப்பிடித்த வீடு: பேசும் கிளியால் உயிர் தப்பிய மனிதர்

08/Nov/2020 03:02:51

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு கிளியால், ஒரு மனித உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. கிளி எச்சரித்ததால், விபத்தில் சிக்காமல் தப்பித்து இருக்கிறார் ஆண்டன் க்யுயென்.

ஆண்டன் க்யுயென் என்பவர், ஆஸ்திரேலியாவின், க்வீன்ஸ்லாண்ட் மாகாணத்தின் பிரிஸ்பன் நகரில் தனியாக வாழ்ந்து வருகிறார். இரவு நேரத்தில், இவர் உறங்கிக் கொண்டிருந்த போது, இவருடைய வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கி இருக்கிறது. எப்படி தீ பிடித்தது என்கிற காரணம் இதுவரை தெரியவில்லை. அது குறித்து விசாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

இந்நிலையில், ஆன்டனை எழுப்ப, பச்சைக் கிளி தொடர்ந்து அலறி இருக்கிறது என க்வீன்ஸ்லாண்ட் தீயணைப்புத் துறை ஆய்வாளர் கேமரூன் தாமஸ் கூறியிருக்கிறார். வீட்டில் புகையை கண்டுபிடித்து எச்சரிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் அந்த இயந்திரங்களுக்கு முன்பே, பச்சைக் கிளி ஆன்டனை எழுப்பி வெளியே அழைத்துச் சென்றுவிட்டது என்றார் கேமரூன்.

இது குறித்து பேசிய ஆன்டன் க்யுயென் ஒரு வெடிச் சத்தத்தைக் கேட்டேன். எரிக் (பச்சைக் கிளி) அலறும் சத்தமும் கேட்டது. எனவே எழுந்து பார்த்தால், புகை வாடை வந்தது. உடனடியாக எரிக்கை கையோடு எடுத்துக் கொண்டு, வீட்டின் பின் புறத்தைப் பார்த்தால் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. எனவே விரைந்து வீட்டை விட்டு வெளியே வந்தேன் என்று கூறி உள்ளார்.

க்வீன்ஸ்லாண்ட் நேரப்படி, பின் இரவு ஒரு மணி அளவில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்கள். நான்கு தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்து இருக்கிறார்கள். ஆன்டன் க்யுயென் தன் பச்சைக் கிளி மற்றும் ஒரு பையுடன் தப்பித்தார். குறிப்பாக எரிக் என்கிற பச்சைக் கிளிக்கோ ஆண்டன் க்யுயென்னுக்கோ எந்த வித காயமும் ஏற்படவில்லை.


Top