30/Oct/2020 06:33:41
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. சமீபகாலமாக மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்ததுடன் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதா பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஈரோடு பேருந்துநிலையம், நாச்சியப்பா வீதி, காந்திஜி சாலை, ரயில் நிலையம் அருகே சென்னிமலை சாலை, கருங்கல் பாளையம் வீரப்பன்சத்திரம் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. தெருக்களில் நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் நாய்கள் துரத்தி குரைக்கின்றன. நாய்கள் துரத்தியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவர்களும் உண்டு.
குறிப்பாக இறைச்சிக் கடைகள் முன்பு 20-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று கூடி நிற்கின்றன. அப்போது அந்த வழியாக நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்துகின்றன. தெருநாய்கள் எண்ணிக்கை குறைக்கும் வகையில் அவைகளுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெருக்கு தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. காலை நேரம் மாலை நேரம் இரவு நேரம் என எந்த நேரமும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 15 முதல் 20 பேர் வரை நாய் கடிக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதம் இதன்படி பார்த்தால் மாதம் மட்டும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 500 முதல் 600 பேர் வரை நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே பெருகி வரும் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறும்போது, ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அகில இந்திய பிராணிகள் நல வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகளிடம் தகவல் கேட்டு வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடங்கப்படும் என்றார்.