22/Oct/2020 01:03:03
புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
இவ்விழாவில் அவர் பேசியது: விராலிமலையிலுள்ள ஐடிசி தொழிற்சாலையானது தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க ரூ.100 கோடியில் மாவு தயாரிக்கும் ஆலையை விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடியாக 2,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. என்றார். இதைத்தொடர்ந்து, ஐடிசி தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, விராலிமலை இலுப்பூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த காளைமாட்டு உருவச்சிலையை திறந்து வைத்து முதல்வர் பேசுகையில், புதுக்கோட்டை வீரம் விளைந்த மண். தமிழத்திலேயே ஜல்லிக்கட்டு அதிகம் நடைபெறக்கூடிய மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இங்கு ஏறத்தாழ 120 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக புதுக்கோட்டை மண்ணின் மைந்தர் அன்புச்சகோதரர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதை நிரூபிக்கும் வகையிலும் இந்த உலகுக்கு உணர்த்தும் வகையிலும் மிகவும் நேர்த்தியாக இந்த ஜல்லிக்கட்டுக் காளையை ஒரு இளைஞர் அடக்கும் உருவச்சிலை அவர் வடிவமைத்து இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.