logo
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

21/Oct/2020 03:23:25

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற  தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்2  தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

 இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  5 ஆண்டுகளுக்குமேல்  காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள்  40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருக்க வேண்டும்.  அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவியருக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. 

 ஏற்கெனவே உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்கத்தேவையில்லை.  மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பில்  தேர்ச்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்க கூடாது.   

இந்தத்தகுதிகள் உள்ள நபர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். 

 விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் இவ்வுதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் இவ்வுதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது. 

 மேலும், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகள் ஏப்ரல் 2020 முதல் மே 2020 வரையிலான காலத்தில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காமல் இருக்கும் பயனாளிகள் பிப்ரவரி 2021-க்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கலாம். 


Top