logo
முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது

முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது

13/Oct/2020 11:31:12

 உடல் நலக்குறைவால் காலமான தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல் இன்று காலையில் தகனம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவுசாயம்மாள், தமிழக முதல்வரின் தாயாரான இவர், உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை (அக்.13) அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 

காலை 8 மணியளவில் சிலுவம்பாளையம் வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தவுசாயம்மாளின் உடல், அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், கட்சியினர், கிராம மக்கள் என திரளானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன்,  தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பணன், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் அஞ்சலி செலுத்தினார்.

அன்னையை இழந்து வாடும் முதல்வருக்கு ஆழ்ந்த இரங்கல்: மு.க.ஸ்டாலின்

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின்  தாயார் தவுசாயம்மாள் அவர்கள் தனது 93-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த  அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட  இரங்கல் செய்தி: 

 எவ்வளவு வயதானாலும் தாய் தாய்தான். அந்த அன்புக்கு ஈடு இணை கிடையாது. தன் அன்புத் தாயை இழந்து வாடும் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக்கொள்கிறோம்.


Top