09/Oct/2020 12:22:35
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரும்பு சாகுபடி பகுதிகளை அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கரும்புகளை எடுத்து வந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். கரும்பு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரும்பு சாகுபடி பகுதிகளை அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அறந்தாங்கி ஈ.ஐ.டி பாரி ஆலையிடம் உள்ள ரூ.60 கோடி நிலுவை தொகையை கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் 200 -க்கும் மேற்பட்டோர் ஆலைக் கரும்புகளை கையில் ஏந்து வந்து முழக்கமிட்டனர்.