05/Oct/2020 11:37:21
புது தில்லி: கொரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் பணத்தாள்கள் (ரூபாய் நோட்டு) மூலம் பரவும் என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்திந்திய வர்த்தகக் கழகம் கடந்த மார்ச் 9-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், ரூபாய் நோட்டுகள் வாயிலாக கொரோனா வைரஸ், மற்றும் பாக்டீரியாக்கள் பரவுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தக் கடிதத்தை, மத்திய நிதியமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் பதிலில், பணத்தாள்கள் மூலமும் கொரோனா வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், முடிந்த அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் கூறியுள்ளது.
மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம் என்றும், பல்வேறு ஆன்லைன் வசதிகள் மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.