logo
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது: உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொடிவேரி அணையில் குளிக்க தடை

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது: உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொடிவேரி அணையில் குளிக்க தடை

02/Sep/2021 12:06:07

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு ,கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்ததால்  கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக 100 அடியை எட்டியது. அதிலிருந்து பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டிய இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 

நேற்று மாலை 4 மணி அளவில் 102 அடியை எட்டியது. பவானிசாகர் அணையில் தண்ணீர் தேங்குவது குறித்து பொதுப்பணித்துறை வகுக்கப்பட்ட விதியின்படி செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை 102 அடி வரையிலும், அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 102  அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதை அடுத்து பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர், வருவாய்த் துறையினர் மூலம் ஒலிபெருக்கி தண்டோரா மூலம் பவானி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பவானி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து வருவாய்த் துறையினர்,  பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 341 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 3770 கன அடியும் என மொத்தம் 4270 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கோபி அடுத்த கொடிவேரி அணைக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Top