logo
கன்னியாகுமரி முதல் தில்லி வரை  சிஆர்பிஎப் வீரர்கள் சைக்கிள் பேரணி: ஈரோட்டில் உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரி முதல் தில்லி வரை சிஆர்பிஎப் வீரர்கள் சைக்கிள் பேரணி: ஈரோட்டில் உற்சாக வரவேற்பு

28/Aug/2021 11:46:01

ஈரோடு, ஆக:கன்னியாகுமரியில் இருந்து தில்லி  வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் வந்த ரிசர்வ் போலீஸ் படை குழுவினருக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய மக்களின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து தில்லி வரை, 2800 கிலோமீட்டர் தூரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்) சைக்கிளில் ஊர்வலமாக சென்று உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஊர்வலம் 60 போலீசாருடன் கடந்த 22- ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு வந்தடைந்தனர்.

இவர்களுக்கு ஈரோடு கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் சி.ஆர்.பி.எப்., துணை கமாண்டர்கள் ராஜேஷ். முகமதுபையாஷ் ஆகியோர் தலைமையில் சைக்கிள் பேரணியாக வந்த போலீசாரை என்.சி.சி. மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்த  நிகழ்ச்சியில்,  ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன், என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் வி.பாலுசாமி, மெடிக்கல் அலுவலர் டாக்டர் கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட போலீசார் இரவில் தங்குவதற்கு கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து  (ஞாயிறு) புறப்படும் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக தில்லி ராஜ்கோட்டிற்கு காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று செல்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஊர்வலத்துக்கு தேவையான ஏற்பாடுகளை, தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில், மாநில போலீஸ்துறை இயக்குனர் சைலேந்திரபாபு செய்துள்ளார்.

Top