22/Aug/2021 10:01:52
ஈரோடு, ஆக: போலி ரயில் என்ஜின் டிரைவரை காவலில் எடுக்க போலீசார் சட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் ஷியால்டாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 12-ஆம் தேதி இரவு ஈரோடு ரெயில் நிலையம் வந்தது. மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ரெயில் என்ஜின் டிரைவர் உடையில் இருந்த மேற்கு வங்க மாநிலம் சாட்டை ஹரிராம்பூர் ஷர்துல் என்பவரின் 17 வயது மகன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்ராயில் ஷேக் (21) ஆகியோரை ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த 17 வயது சிறுவன் இரண்டு வருடங்களாக மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரெயிலை இயக்கி வந்தது தெரியவந்தது. தற்போது அந்த சிறுவன் கோவை சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனை காவலில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சட்டரீதியாக வாய்ப்பில்லை.
ஆனால், அந்த சிறுவனை காவலில் எடுத்தால் மட்டுமே இத்தனை ஆண்டுகள் அவன் ரயிலை இயக்கி உள்ளார். எத்தனை நபர்களுக்கு ரெயில் இயக்கியுள்ளான். போலியாக அங்கு எத்தனை பேர் ரயில் இயக்கி வருகின்றனர் என்பது போன்ற விவரம் தெரியவரும். அவர்களுக்கு பின்னணியில் உள்ள கும்பல் குறித்து தெரியவரும்.
சிறுவனை காவல் எடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் சட்ட ரீதியாக ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.