logo
தடை காரணமாக முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறாததால்  களையிழந்து காணப்பட்ட  புதுக்கோட்டை நகரின்  நீர் நிலைகள்

தடை காரணமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறாததால் களையிழந்து காணப்பட்ட புதுக்கோட்டை நகரின் நீர் நிலைகள்

08/Aug/2021 11:21:03

புதுக்கோட்டை, ஆக:  அரசின் தடை காரணமாக  தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறாததால்   புதுக்கோட்டை நகரிலுள்ள நீர்நிலைகள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது.

அமாவாசை என்றாலே இந்துக்களின்  புனிதமான நாளாக கருதப்படுகிறது. இதில்  ஆடி அமாவாசை சிறப்பானதாக, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு தன் வம்சம், தலைமுறை எப்படி இருக்கிறது என பார்க்க வருவதாக கூறப்படுகிறது. மகாளய அமாவாசை அன்று பூலோகத்தை பித்ருக்கள் வந்தடைகின்றனர். தை அமாவாசை தினத்தில் மீண்டும் பிதுர் லோகத்திற்கு நம் பித்ருக்கள் கிளம்புச்செல்வதாக ஐதீகம்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலையில் நீராடி, பின்னர் சிவாலயத்தில் எம்பெருமானை வழிபாடு செய்துவிட்டு, பிதிர் தர்ப்பணம் கொடுப்பது அவசியம். பிறகு அன்னதானம் செய்தல் ஆகியன இந்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களாகும். இந்த நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றிடலாம் என்பது நமது பண்டைய காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீகம்.


இந்நிலையில்,  ஆடிஅமாவாசை நாளில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு நதிக்கரை, நீர்நிலைகளில் , தர்ப்பணம் செய்யக் கூடாது எனவும் கோயில்களை மூடவேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக புதுக்கோட்டை நகரின் மத்தியிலுள்ள பல்லவன் குளக்கரை மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. 

படித்துறை அடைக்கப்பட்டு போலீஸார் காவலுக்கு இருந்தனர். எனினும், ஒரு சிலர் தங்கள் முன்னோர்களுக்கு அந்த இடத்தில் எளிய முறையில் புரோகிதர்கள் யாருமின்றி  தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளில்  சமூக இடைவெளியை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து தர்ப்பணம் பலர் கொடுத்தனர்.


Top