logo
ரயில் முன்பதிவுக்கு இந்தி மொழியில் குறுஞ்செய்தி தகவல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

ரயில் முன்பதிவுக்கு இந்தி மொழியில் குறுஞ்செய்தி தகவல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

04/Oct/2020 05:54:57

ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கு இந்தி மொழியில் குறுஞ்செய்தி அனுப்பப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கு இந்தி மொழியில் குறுஞ்செய்தி  அனுப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வேத்துறைக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான குறுஞ்செய்திகள் கடந்த இரு நாட்களாக இந்தியில் அனுப்பப்படுகின்றன. ஹிந்தி பேசாத மக்களுக்கு இந்தி மொழியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். இதை தொடர் வண்டித்துறை கைவிட வேண்டும்.

இந்திய அலுவல் மொழிச் சட்டம் -1976  தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. இந்த சட்டத்தின் ’சி’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் அனைத்து அலுவல் சார்ந்த அறிவிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதை மீறி இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பியது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ரயில்பயணச்சீட்டு முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Top