30/Jul/2021 01:44:50
புதுக்கோட்டை, ஜூலை: மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரிமளம் எட்டாம் மண்டகப்படி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.ராமையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.அடைக்கப்பன், மாட்டுவண்டித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கி.வெள்ளைச்சாமி, ஆ.மோகனசுந்தரம், எஸ்.பழனியப்பன், ஏ.அழகர், எம்.செல்லையா உள்ளிட்டோர் பேசினர்.
அரிமளத்தை அடுத்த கடையக்குடியில் மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு மணல்குவாரியைத் திறந்து அனைவரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். மிகுந்த சிரமத்தை சந்தித்துவரும் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.