28/Jul/2021 10:31:45
ஈரோடு, ஜூலை: ஈரோட்டில் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் -ஊழியர்கள் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் 10 அம்ச வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதத்திற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேலு வகித்தார். ஓய்வு ஊழியர் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் மணியன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021 ஜூன் மாத ஊதியத்தை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள நிலங்களை பணம் ஆக்குவதன் மூலம் பி.எஸ்.என்.எல் கடன்களைத் திருப்பிக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3-ஆவது ஊதியம், ஓய்வூதியம் மாற்றம், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வு காலப் பயன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் அலுவலர்கள் பங்கேற்றனர். இதனால் பிஎஸ்என்எல் தொடர்பான பணம் செலுத்துவது, பிஎஸ்என்எல் லைன் பழுது ஏற்பட்டால் அதனை சீரமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.