logo
ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு  பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு

23/Jul/2021 09:06:31

புதுக்கோட்டை, ஜூலை: ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்கிரன் அருள் கிடைக்கும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்தமாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, என அனைத்து திருவிழாக்களும் நடைபெறும், குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.

ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன் என்பதுதான். எ

னவே, இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சக்தி தரும் ஆடி மாதம்: சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள்.

பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புதுக்கோட்டையில் உள்ள மாரியம்மன்கோயில்கள், சிவன் கோயிகள், வெங்கலப்பிடாரி கோயில்களில்  திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.

Top