logo
 பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பிரிவுகளில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கல்

பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பிரிவுகளில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கல்

15/Jul/2021 06:46:01

சென்னை, ஜூலை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2021) தலைமைச் செயலகத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் விதமாக, 250 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குப் பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிட இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும், பொது நூலகத் துறையில் பணியாற்றிட 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நூலகர் பணியிடத்திற்கும்,

ஒரு பணியாளரின் வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும், என மொத்தம் 261 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6 வாரிசுதாரர் களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு,  பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top