15/Jul/2021 05:03:23
விராலிமலை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் (காமராஜரின் பிறந்தநாள்) கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 -ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு 2006 -ஆம் ஆண்டு முதல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும், மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் கொரோனா பெருந்தொற்று குறித்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி காமராஜரின் பிறந்த நாளினை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமியின் அறிவுரையின்பேரில், இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் தலைமையில் காமராஜரின் 119 -வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பெருந்தலைவர் காமராஜர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. இதில், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர்கள் பீட்டர், இசக்கிமுத்து மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.