15/Jul/2021 12:09:54
புதுக்கோட்டை, ஜூலை: தமிழக அரசின் வேளாண்நிதிநிலை அறிக்கையில் இயற்கை வேளாண்மை மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான்மலை ஸ்டாமின் நிலையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் தோட்டக்கலைப் பண்ணையினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (14.07.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மேலும் பேசியது: விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை ஸ்டாமின் நிலையம், வேளாண் கல்லூரி மற்றும் தோட்டக்கலைப் பண்ணை ஆகியவை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளவாறு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதனடிப்படையில் விவசாயிகளிடம் தேவைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பட்ஜெட்டில் சிறப்பு திட்டம் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னுரிமை அளித்து அதற்குரிய திட்டமும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும். முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். விவசாயிகள் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படும் என்றார் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
இந்நிகழ்வில், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர். ஆர்.பிருந்தாதேவி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன் , வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் செல்வராஜ், முன்னோசி விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.