logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை:1676 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை:1676 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்

14/Jul/2021 11:40:54

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை:1676 பேர் வீட்டு தனிமையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆவது வேகமாக பரவியது. குழந்தைகள் வாலிபர்கள் வயதானவர்கள் என வயது பேதமின்றி அனைவரையும் தாக்கியது. இதைப்போல் உயிரிழப்பும் அதிகரித்துக் காணப்பட்டது.

மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வந்தது. உதாரணமாக தினசரி கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. முதலில் 4 ஆயிரம் என்ற அளவில் இருந்த பரிசோதனை தொற்று அதிகரித்ததன் காரணமாக பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 

மாநகராட்சி பகுதியில் தினமும் 4000 பேருக்கும், புறநகர் பகுதியில் 6 ஆயிரம் பேருக்கும் என 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் தொற்றின்  தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வரை 11 லட்சத்து 3 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 8899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் தற்போது  1,676 பேர் வீட்டு தனிமையில் கண்காணிப்பில் உள்ளனர்.

 மாவட்டம் முழுவதும் 43 பகுதிகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக குறைந்துள்ளது.  மாவட்டத்தில் தொற்றில் இருந்து 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் .ஒரு சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Top