logo
ஈரோட்டில் 2 மாதங்களுக்குப் பிறகு  உழவர் சந்தை மீண்டும் திறப்பு: உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதி

ஈரோட்டில் 2 மாதங்களுக்குப் பிறகு உழவர் சந்தை மீண்டும் திறப்பு: உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதி

12/Jul/2021 05:32:44

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் என 5 இடங்களில் உழவர் சந்தை இயங்கி வந்தது. உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் நேரடியாக வந்து விற்பதால் மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு காய்கறி விலை குறைவாகவே இருக்கும். இதனால் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படும். ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:30 மணிக்கே விவசாயிகள் உழவர் சந்தைக்கு வந்து விடுவார்கள். பின்னர் 5.30 மணி முதல் பொதுமக்கள் காய்கறி வாங்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில்,கொரோனா தாக்கம் காரணமாக உழவர் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்நிலையில் தாக்கம் குறையத் தொடங்கியதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த 5-ஆம் தேதி முதல் பிற காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.ஆனால் ,ஈரோடு மாவட்டத்தில் உழவர் சந்தை செயல்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உழவர் சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தையும் இந்த முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று 5 இடங்களில் உழவர் சந்தை வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. ஈரோடு சம்பத் நகரில் மொத்தம் 134 காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் 50 சதவீத  கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 திங்கள்கிழமை சம்பத் நகரில் 65 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாள் என்பதால் 54 கடைகள் மட்டுமே திறந்திருந்தது.  4:30 மணிக்கு எல்லாம் வியாபாரிகள் வந்து விட்டனர். 5.30 மணி முதல் பொதுமக்கள் காய்கறி வாங்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நுழைவாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் கையில் சானிடைசரும் அளிக்கப்பட்டது. முக கவசம் அணிந்து வந்த பொதுமக்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதைப்போல் விவசாயிகளும் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டிருந்தனர். 

சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் ஒரு கடை வைத்து ஒரு கதை அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள சமூக இடைவெளியை  கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன.  54 கடைகளில் 40 கடையில் உள்ள விவசாயிகள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டுளனர்.

விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் பெரியர் நகர் பகுதி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதியில் உள்ள உழவர் சந்தையும்  செயல்படத் தொடங்கியது.

Top