10/Jul/2021 01:22:03
ஈரோடு, ஜூலை:ஈரோடு சென்னிமலை ரோடு கே. கே. நகரில் ரெயில்வே பாலத்தின் அருகே உயர்மட்ட தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதைப்போல் சாவடிபாளையத்திலும் ரெயில்வே பாலத்தின் அருகே உயர்மட்ட தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர் பகுதிக்குள் பெரிய கனரக வாகனங்கள் வருவதை தடுக்கும் வகையில் இந்த கம்பிகள் ரெயில்வே துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னிமலை ரோடு கே.கே.நகரில் ரெயில்வே பாலத்தின் அருகே இருந்த உயர்மட்ட தடுப்பு கம்பியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதில் அந்த உயர்மட்ட தடுப்புக் கம்பி உடைந்து ரோட்டில் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோட்டிலிருந்து சென்னிமலைக்கும், சென்னிமலை இருந்து ஈரோடுக்கு வருவதற்கும் இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்ற வந்தன.
இதனால் இன்று காலை அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடைந்த இரும்பு கம்பியை ரோட்டில் இருந்து அகற்றி சாலையோரம் தள்ளி வைத்தனர். இதை அடுத்து போக்குவரத்து சீரானது.