logo
 தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில்   கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

09/Jul/2021 09:45:04

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ. 98,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.  திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம்   ரூ. 8,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 20,00,000மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ. 30,00,000 கடன் வழங்கப்படுகிறது. 

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% , பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக  பட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது.  சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.  திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% , பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ. 1,50,000கடன் வழங்கப்படுகிறது.

மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுககு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3மூ வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ. 30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்கு இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். 

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தில் சிறுபான்மையினத்தைச் சார்ந்தவர்கள்  விண்ணப்பித்து பயனடையலாம்

Top