logo
  ஈரோட்டில் கூடுதல் சுங்க கட்டணம், வாடகை வசூலிப்பதைக் கண்டித்து காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல்

ஈரோட்டில் கூடுதல் சுங்க கட்டணம், வாடகை வசூலிப்பதைக் கண்டித்து காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல்

06/Jul/2021 12:43:45

ஈரோடு, ஜூலை ஈரோட்டில் கூடுதல் சுங்க கட்டணம், வாடகை வசூலிப்பதைக் கண்டித்து காய்கறிகளை சாலையில் காய்கறிகளைக்  கொட்டி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

 ஈரோடு ஆர் .கே. வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் ஈரோடு . . சி. பூங்கா பகுதியில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு 800- க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான, பொதுமக்கள் வியாபாரிகள் வருவதால் எப்போதும் காய்கறி மார்க்கெட் பரபரப்பாக காட்சியளிக்கும். காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக இங்கு மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட சுங்க கட்டணத்தை விட ஒப்பந்ததாரர் கூடுதல் கட்டணம், கூடுதல் வாடகை வசூலிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லாததால்  திங்கள்கிழமை ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கூடுதல் சுங்க கட்டணம், வாடகை வசூலை கண்டித்து திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்


இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் டவுன் டி.எஸ்.பி. ராஜு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது வியாபாரிகள் கடைக்கு தினசரி 16 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் 50 ரூபாயும், காய்கறி மேட்டை ஒன்றுக்கு 7 ரூபாய்க்கு பதில் 30 ரூபாயும் வசூலிப்பதாகவும், வாகன அனுமதி கட்டணமும் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும் பணத்தை உடனடியாக கட்டவில்லை என்றால் கடையை காலி செய்து விடுவதாகவும், மிரட்டலும் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே எங்கள் குடும்பத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். ஆனால் இவர்கள் திடீரென வாடகை உயர்த்தி விட்டனர். இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினர். உங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நீங்கள் எவ்வளவு வாடகை கொடுக்க வேண்டும், சுங்க கட்டணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து மார்க்கெட் பகுதியில் போர்டு வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.இதை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த  எம்எல்ஏ- திருமகன் ஈவெரா  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேசி இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

 

Top